வெள்ளி, 11 ஜூன், 2010

மிருதங்கம்


மிருதங்கம் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும்.
மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்

மிருதங்கக் கலைஞர்கள்

தஞ்சாவூர் நாராயண சாமி அப்பா
புதுக்கோட்டை தக்ஷினாமூர்தி பிள்ளை
கும்பகோணம் அழகநம்பியா பிள்ளை
பழனி முத்தையா பிள்ளை
இராமநாதபுரம் சித்சபை சேர்வை
தஞ்சாவூர் வைதியநாத ஐயர்
தஞ்சாவூர் ராமதாஸ் ராவ்
குற்றாலம் சிவவடிவேலு பிள்ளை
சென்னை வேணுநாயக்கர்
பழனி சுப்பிரமணிய பிள்ளை
பாலக்காடு டி.எஸ். மணி ஐயர்
இராமநாதபுரம் சி.எஸ் முருகபூபதி

வீணை


வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்

வரலாறு

பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.

வீணையின் பாகங்கள்

குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.

வீணையின் அமைப்பு

வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.
தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.
யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.
நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.
தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.

வாசிப்புத் தந்திகள்

சாரணி (ச)
பஞ்சமம் (ப)
மந்தரம் (ச)
அநுமந்தரம் (ப)

தாள-சுருதித் தந்திகள்

பக்கசாரணி (ச)
பக்கபஞ்சமம் (ப)
ஹெச்சு சாரணி (ச்)

வாசிக்கும் முறை

வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள-சுருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல்களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ் தண்டிலுள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார்.
தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.

வீணை வகைகள்

பலவகையான வீணைகள் உள்ளன. அவற்றுட் சில:
சரசுவதி வீணை
உருத்திர வீணை
விசித்திர வீணை
மகாநாடக வீணை

வீணைக்கு உகந்த பக்கவாத்தியங்கள்

தம்புரா
தவில்

புகழ் பெற்ற வீணை இசைக் கலைஞர்கள்



வீணை தனம்மாள்
சிட்டிபாபு
எஸ். பாலச்சந்தர்
வீணை தனம்மாள்
வீணை காயத்திரி
ஆர். பிச்சுமணி ஐயர்
ஈமணி சங்கர சாஸ்திரி

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

கருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு

இரண்டுக்கும் பொதுவானவை
7 சுவரங்கள், 12 சுவரஸ்தானங்கள், 22 சுருதிகள், வாதி, சம்வாதி, விவாதி, அனுவாதி என்பன யாவும் இவ்விரு இசைகளுக்கும் பொதுவான அம்சங்களாகும். கருநாடக சங்கீதத்தில் 72 மேளகர்த்தாக்கள் (தாய் ராகங்கள்) இருப்பதைப் போன்றே ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் 10 தாட்கள் உண்டு

ஆரம்ப அப்பியாச வகைகள்

கர்நாடக சங்கீதத்தில் ஆரம்ப அப்பியாச வரிசைகள் மாயாமாளவகெளளை இராகத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. ஆனால் இந்துஸ்தானி சங்கீதத்தில் ஒவ்வொரு ராகத்திலும் பலடாஸ் என அழைக்கப்படும் சுவர அப்பியாச வரிசைகள் கற்பிக்கப்படுகின்றன.

உருப்படிகள்

கருநாடக சங்கீதத்தில் உள்ளவாறு ஏராளமான உருப்படி வகைகளோ தள வகைகளோ இராகங்களோ இந்துஸ்தானி சங்கீதத்தில் கிடையாது. கான காலத்திற்கேற்பவே இராகங்களைப் பாடும் முறை இந்துஸ்தானி சங்கீதத்தில் இன்னும் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால், கர்நாடக இசையிலோ இம்முறை அருகி வருகின்றது. கர்நாடக இசையில் கமகங்கள், பிருகாக்கள் என்பன மிக முக்கியமான அம்சங்களாகும். கமகம் என்னும் அம்சம் இந்துஸ்தானி சங்கீதத்தில் காணப்படுகின்ற போதும் அவை லேசான ஏற்ற ஜாரு, இறக்க ஜாரு வகையிலான கமகங்களாகும்

பாடும் முறை

இராகம் பாடும் முறையில் இரு இசைகளுக்கும் வேறுபாடு காணப்படுகின்றது. இந்துஸ்தானி சங்கீதத்தில் ஆலாபனை விஸ்தாரமாக நீண்ட நேரம் பாடப்படுகிறது. நீண்ட நேரம் மந்த்ர ஸ்தாயியில் சஞ்சாரம் செய்த பின்னரே படிப்படியாக மத்யஸ்தாயி, மேல்ஸ்தாயியில் சஞ்சாரம் செய்வர்.
சாதாரணமாக ஹிந்துஸ்தானி கச்சேரியில் 2, 3 இராகங்களே பாடப்படுகின்றன. ஆனால், கர்நாடக சங்கீதத்தில் 3 மணி நேரக் கச்சேரியில் 10-15 உருப்படி வகைகள் பாடப்படுகின்றன. கர்நாடக சங்கீதக் கச்சேரியின் ஆரம்பத்தில் வர்ணம், பஞ்சரத்ன கீர்த்தனை, துரிதகால கீர்த்தனைகள் என்பன கச்சேரி களை கட்டுவத்ற்காகப் பாடப்படுகின்றன. இந்துஸ்தானி கச்சேரி பெரும்பாலும் ஆலாபனையுடனேயே ஆரம்பமாகிறது. கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் ஓர் இராகத்தில் ஒரு உருப்படியே பாடப்படுதல் வழக்கமாகும். ஆனால், ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஒரே இராகத்திலேயே விளம்ப லய உருப்படி, துரித லய உருப்படி என்பன பாடப்படுகின்றன

பக்க வாத்தியங்கள்

கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டுக் கச்சேரியில் பக்க வாத்தியமாக வயலின், மிருதங்கம், கடம், மோர்சிங், கஞ்சிரா போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படும். பிரதானமான இராகம், கிருதி, பல்லவி பாடப்பட்ட பின் தனி ஆவர்த்தனம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால் இந்துஸ்தானி இசையில் சுருதிக்காக தம்புராவும் , தாளத்திற்காக தபேலாவும் மாத்திரமே வாசிக்கப்படும். தனி ஆவர்த்தனத்திற்கு இவ்விசையில் இடம் இல்லை. கர்நாடக இசையின் பாதிப்பினால் ஹிந்துஸ்தானி இசை கச்சேரிகளில் இப்போது வயலின் வாசிக்கப்படுகிறது

பிற

கர்நாடக-ஹிந்துஸ்தானி சங்கீதங்களுக்கு இடையிலான ஒற்றுமை-வேற்றுமை
கர்நாடக சங்கீதத்தில் கையினால் தாளம் இடுவது போன்று ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் கையினால் தாளம் போடுவதில்லை. தபேலாவில் வாசிக்கப்படும் டேக்கா (ஜதி) ஒட்டியே பிரதானமாக பாடுபவர் பாடவேண்டும் அல்லது பக்கவாத்தியம் வாசிப்பவர் வாசிக்க வேண்டும். ஆகையினால் ஹிந்துஸ்தானி இசையில் தபேலா வாசிப்பு முறையை பாடகர், வாத்திய இசை விற்பன்னர் யாவரும் அறிந்திருத்தல் அவசியம்.
ஹிந்துஸ்தானி இசையில் கற்பனாஸ்வரம் பாடும் முறை மிகக் குறைவாகும்.கீர்த்தனை, கிருதியில் உள்ள பல்லவி, அனுபல்லவி போன்ற அங்க வேறுபாடுகளை ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஸ்தாயியில், அந்தரா எனக் கூறுவர்.
கஸல் என்னும் ஹிந்துஸ்தானி உருப்படி வகை கர்நாடக சங்கீதத்தில் ஜாவளிக்கு ஒப்பானது. தும்ரி என்பது பதத்த்ற்கும், தரானா என்பது தில்லானாவுக்கும் ஒப்பானது.
ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பலவித கரானாக்கள், அதாவது குருகுல முறைகள் உண்டு. ஒவ்வொரு கரானாவும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றுவதாக அமகின்றது. உ+ம்: கவாலியர், ஆக்ரா, ராம்பூர், பெனாரஸ்
தென்னிந்தியாவிலும் கேரளாப் பாணி, ஆந்திராப் பாணி என்றிருந்தாலும் ஹிந்துஸ்தானி சங்கீத கரானாக்களைப் போன்று அதிக வேறுபாடில்லை. ஒரே உருப்படி வகைகளே தென்னிந்தியா எங்கும் பாடபடுகின்றன.
மந்த்ரஸ்தாயி, மத்யஸ்தாயி, தாரஸ்தாயி என்னும் 3 ஸ்தாயிகளும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் மந்த்ரசப்தக, மத்யசப்தக, தாரசப்தக என அழைக்கப்படுகின்றன.
தாய் ராகங்களை ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் "தாட்" என அழைப்பர். தாட் ராகத்திற்கான அம்சங்கள்: 1. 7 ஸ்வரங்களையும் கொண்டிருத்தல் 2. ஸ்வரங்கள் கிரமகதியில் செல்லுதல் 3. ஒரே ஸ்வரத்தின் கோமள, தீவிர பேதம் இரண்டும் அடுத்தடுத்து தாட்டில் வரலாம். 4. தாட் ஆரோகணத்தை மட்டும் கொண்டதாகும். உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ் (கரகரப்பிரியா) காபிதாட்டைக் குறிக்கும். 5. தாட் ரஞ்சகத்தை அளிக்க வேண்டிய அவசியமில்லை. 6.ஒவ்வொரு தாட்டும் அத்தாட்டிலிருந்து பிறக்கும் ராகத்தின் பெயரைக் கொண்டு விளங்கும். உ+ம்: காபிதாட் அதிலிருந்து பிறந்த பிரபல்யமான காபியின் பெயரைக் கொன்டு அழைக்கப்படுகிறது ஹிந்துஸ்தானியில் இவ்வாறான 10 தாட்கள் உண்டு. இவற்றிலிருந்தே இரகங்கள் பிறக்கின்றன.
கர்நாடக சங்கீதத்தில் உள்ள போன்றே இராகங்கள் ஒளடவ, ஷாடவ, சம்பூர்ண என ராகங்களில் உள்ள ஸ்வரங்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து பிரிக்கப் படுகின்றன. ஒளடவ ராகம்: பூபாலி, ஹிந்தோளம் ஷாடவ ராகம்: மார்வா, பூர்யா சம்பூர்ண ராகம்: யமன், பிலாவல்
கர்நாடக சங்கீதம் போன்றே ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் பாடகர் தம் குரலுக்கு உகந்த சுருதியை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு. கர்நாடக சங்கீதத்தில் தம்புராவை சுருதி கூட்டும் போது பஸஸஸ என்று கூட்டப்படுகிறது. ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் அவ்வாறே.
கர்நாடக சங்கீதத்தைப் போல் ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் 7 ஸ்வரங்களும் கோமள, தீவிர பேதத்தினால் 12 ஸ்வரஸ்தானங்களாகின்றன.
இரு சங்கீதங்களிலும் மனோதர்மம் இன்றியமையாததாகும். ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஆலாபனையை "ஆலாப்" என்றழைப்பர். ஆலாப் 4 பிரிவுகளாகப் பாடப் படுகிறது. 1. ஸ்தாயி 2. அந்தரா 3. ஸஞ்சாரி 4. ஆபோக்
ஜோட் என்பது ஆலாபனையை மத்திம காலத்தில் பாடுவதாகும். இது ஓரளவு கர்நாடக சங்கீதத்தில் தானம் பாடும் முறைக்கு ஒத்ததாகும்

புதன், 24 பிப்ரவரி, 2010

இசைக்கு ஒரு அறிமுகம்

இசைக்கு ஒரு அறிமுகம் இசைக்கு ஒரு அறிமுகம்::
இசைக்கு ஆரம்பம் தேடுவது மனித குலத்தின் ஆரம்பத்தைத் தேடுவதைப் போல. பிரபஞ்சமே ஓம் என்ற ஒலியில் (Big Bang) உண்டானது என்றால் இசையும் அப்போதே துவங்கி விட்டது எனலாம். இசை என்ற வார்த்தைக்கு, மனதிற்கு உகந்த ஒலிகளின் சங்கமம் என அர்த்தம் கொள்ளலாம். யாருடைய மனதிற்கு? என்ற கேள்வி வரும். எனக்குப் பிடித்த இசை உங்களுக்கு பேரிரைச்சலாக இருக்கலாம்.
அழகு போலத்தான் இது. எது அழகு என் பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால் இசைக்கு கச்சிதமான கணக்குகள் உண்டு. சரியான அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உலகம் முழுவதுமே இசைக்கு சீரான ஒலிகளின் உயர்வு, தாழ்வு, நேரக் கணக்குகள் உண்டு. இன்றைய அவசரகால இசையைத் தவிர 1960களுக்கு முன் வரை இசை எங்குமே இரைச்சலாக இருந்ததில்லை. இசைக்கு எதிர்பதம் இரைச்சல் தான். இரைச்சலில்லாதவை எல்லாம் இசை என்று எளிதாக பொருள் கொள்ளலாம்!

இந்தியா இசையின் பரிணாமம்:
மனிதனை பரவசப்படுத்தக் கூடிய எல்லாவற்றையுமே இறைவனுடன் ஒன்றுபடுத்திப் பார்ப்பது தான் இந்திய வழக்கம். அதிலும் மனிதனை பரவசத்தின் உச்சிக்கு, மெய் மறந்து (போதைப் பொருட்களில்லாமல்!) போகக் கூடிய வல்லமை படைத்த இசையை விட்டு விடமுடியுமா? ஆதிகாலத்தில் இசை என்றால் அது இறைவனுக்கு மிக அருகில் மனிதனைக் கொண்டு செல்லக்கூடியது. இறைவனுக்கு அர்பணிப்பது என்றிருந்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல இந்தியாவில் இசையை மனதை மயக்க, கேளிக்கைக்காக என பின்னரே உபயோகித்தனர் என்று கருதப்படுகிறது.

இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.

இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும் பரிணமித்தது.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010